வீட்டில் கருப்பு-வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியில்
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி..
இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்
இது தான் சமயம் என்று, அம்மா,
ஒரு தோசை கேட்டவனுக்கு ரெண்டு வைத்து விட்டு போனாள்..
நான் திரும்பி பார்த்த போது,
'சும்மா சாப்பிடு டா! வளர்ற பிள்ள தானே!' என்று கொஞ்சினாள்.
இன்று..
ஹோட்டல்-இல் LCD டிவியில்
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி
வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்
எனக்குப் போட்டியாக waiter உம் பார்த்தான்
விளைவு.. கேசரி மீது சட்னி அபிஷேகம்!
இருவரும் உணர்ந்த போது
'சாரி சார்' என்று தலையை சொரிந்தான்..
வேடிக்கை என்னவென்றால்..
அன்று அம்மாவிடம்,
'ஏம்மா இப்படி பண்ணினீங்க' என்று கோபப்பட்டேன்
இன்று இவனிடம்,
'இல்ல.. பரவாயில்லைங்க' என்று ஆறுதல் கூறுகிறேன்..
இப்போது அந்த கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி
தந்த அற்புத வண்ணங்களை இழந்து
மனம் ஏனோ ஏங்குகிறது..